தமிழகம் வரும் ராகுலின் திட்டம் என்ன..?
கர்நாடகா உடனான காவிரி பிரச்சினையின் நடுவே காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் தமிழக பயணம் கவனம் பெற்றுள்ளது. தமிழக முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்கு பின் மீண்டும் தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி, முதலமைச்சர் விஜயை சந்திக்காதது பேசு பொருளாகி உள்ளது.
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழ்நாடு வரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று நடைபெறும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கான பயிற்சி நிறைவு முகாமில் கலந்து கொள்கிறார். கூட்டத்தில் 74 மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் பேசும் ராகுல் காந்தி, அவர்களுடன் குடும்பப் புகைப்படம் எடுத்துக்கொண்டு, கலந்துரையாடுகிறார்.
மேலும், முன்னாள் மாநில தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் கட்சியின் எதிர்கால செயல்பாடுகள், உள்ளாட்சித் தேர்தல், 2029 நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ராகுல் காந்தியின் தமிழ்நாடு பயணம் கட்சியை மாநிலத்தில் வலுப்படுத்த உதவும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். அதேநேரம், காங்கிரஸ் ஆளும் கர்நாடகா உடனான காவிரி பிரச்சினைக்கு நடுவே அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் தமிழ்நாடு பயணம் கவனம் பெற்றுள்ள நேரத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை, அவர் சந்திக்காமல் செல்வதும் பேசு பொருளாகி உள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு பின் தவெக – காங்கிரஸ் கூட்டணி அமைந்த உடன், அமைச்சரவையில் இரு காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் விஜய் இடமளித்தார். அதேநேரம், கேரளா மற்றும் கர்நாடக முதலமைச்சர்களின் பதவி ஏற்பு விழா உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் நிகழ்வுகளில் முதலமைச்சர் விஜய் கலந்து கொள்ளவில்லை. இதனிடையே, நீட் தேர்வு, வினாத்தாள் கசிவால் தமிழகத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களை ராகுல் காந்தி சந்தித்து பேச உள்ளதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.



