திமுகவில் இணைந்த நடிகர் விஜயின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார்..!
நடிகர் விஜயின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும், முதல்வருடன் இணைந்து குழு புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டார். கடந்த 1994-ம் ஆண்டு வெளியான ‘நாட்டாமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் பி.டி.செல்வகுமார்.
விஜயுடன் இணைந்து ‘விஷ்ணு’, ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’, ‘புலி’ ஆகிய படங்களில் நடித்தார். கடந்த 2003-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘வசீகரா’ படத்தின் மூலம் விஜயின் பிஆர்ஓ – ஆனார். தொடர்ந்து விஜயின் மேனேஜராகவும் பணியாற்றி வந்தார்.
விஜய் நடிப்பில் வெளியான ‘மதுர’, ‘ஆதி’, ‘போக்கிரி’, ‘வில்லு’, ‘வேட்டைக்காரன்’, ‘சுறா’, ‘காவலன்’ ஆகிய படங்களுக்கு பிஆர்ஓவாக வேலைபார்த்துள்ளார். மேலும் 2015-ம் ஆண்டு வெளியான ‘புலி’ படத்தை தயாரித்திருந்தார் பி.டி.செல்வகுமார். படம் நஷ்டமடைந்ததாக பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.
அண்மைக்காலமாக விஜயின் தவெகவுக்கு எதிரான தனது கருத்துகளை தெரிவித்து வந்தார் பி.டி.செல்வகுமார். கலப்பை மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தை நடத்தி வந்த பிடி செல்வகுமார் அவருடைய ஆதரவாளர்கள் 100 பேருடன் அண்ணா அறிவாலயத்தில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். பின்னர் முதலமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




