வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள்.. வேறு 12 ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்..!
தமிழ்நாட்டில் நாளை லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், வாக்காளர் அடையாளர் அட்டை இல்லாதவர்கள் வேறு 12 ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம். நமது நாட்டில் தற்போது உள்ள மக்களவையின் காலம் வரும் ஜூன் 16ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதன் காரணமாக 18ஆவது லோக்சபாவுக்கான உறுப்பினர்களைத் தேர்வு செய்ய தற்போது லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை முதல் வாக்காளர்கள் வாக்களிக்கலாம். தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் இருக்கும் வாக்காளர்கள் உரிய ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம். பொதுவாகத் தேர்தல் நாளில் வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பித்தே வாக்களிப்பார்கள். அதேநேரம் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வேறு 12 ஆவணங்களைத் தேர்தல் கண்காணிப்பாளரிடம் காட்டியும் வாக்களிக்கலாம்.
அதேநேரம் பூத் சிலிப்பை அடையாள அட்டையாகக் காண்பிக்க முடியாது என்பது தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது.. அதேநேரம் ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட 12 ஆவணங்களைக் காட்டி வாக்களிக்க முடியும். எந்தெந்த ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம்
ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி அடையாள அட்டை (100 நாள் வேலைத் திட்டத்தின் அடையாள அட்டை), மருத்துவ காப்பீட்டு அட்டை, வங்கி/அஞ்சலக கணக்கு புத்தகங்கள், தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்தியத் தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் ஆகியவற்றைக் காட்டி வாக்களிக்கலாம். இது தவிர மத்திய- மாநில அரசுகள்- பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை, எம்பி- எம்எல்ஏக்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை ஆகியவற்றையும் ஆவணங்களாகக் காட்டி வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.





