மக்களவைக்கு வர அவருக்குத் துணிச்சல் இருக்காது – மோடிக்கு சவால் விடுத்த ராகுல் காந்தி

முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனேவின் நினைவுக் குறிப்புகள் தொடர்பாக பிரதமர் மீதான தனது தாக்குதலைத் தொடர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் விடுத்துள்ளார். பிரதமர் இன்று நாடாளுமன்றத்திற்கு வந்தால், அந்த நினைவுக் குறிப்புகளின் ஒரு பிரதியை அவரிடமே நேரில் வழங்குவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

ராகுல் காந்தி நினைவுக் குறிப்புகளிலிருந்து படிக்க வற்புறுத்தியபோது, ​​அவையில் அமளியான காட்சிகள் ஏற்பட்டன. ஆனால் சபாநாயகர் மற்ற உறுப்பினர்களைப் பேசும்படி கேட்டுக் கொண்டார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, எட்டு எதிர்க் கட்சி எம்.பி.க்கள் மக்களவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஒரு நாள் கழித்து ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்து இருக்கிறார்.

 

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது ராகுல் காந்தி பேசத் தொடங்கியபோதும் திங்கட்கிழமை அன்று மக்களவையில் மோதல் ஏற்பட்டது. இன்று புதன்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் நினைவுக் குறிப்புகளின் பிரதியை கையில் வைத்துக்கொண்டு பேசிய ராகுல் காந்தி, “இன்று மக்களவைக்கு வர பிரதமருக்குத் துணிச்சல் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

 

ஏனென்றால், அவர் வந்தால், நான் இந்தப் புத்தகத்தை அவரிடம் கொடுக்கப் போகிறேன். பிரதமர் வந்தால், நான் நேரில் சென்று இந்தப் புத்தகத்தை அவரிடம் கொடுப்பேன். அதனால் அவர் அதைப் படித்து, இந்த நாடு உண்மையை அறிந்துகொள்ள முடியும்,” என்று கூறினார்.