திமுகவுக்கு மோடி உதவுகிறார்… பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
எப்போதெல்லாம் மோடி தமிழகம் வருகிறாரோ அப்போதெல்லாம் திமுகவிற்கு வெற்றிதான். அந்த வகையில் திமுகவுக்கு மோடி உதவுகிறார் என்று மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
வரும் 6ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதிகட்ட பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் திமுக வேட்பாளர் அர.சக்கரபாணியை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அதை தொடர்ந்து பழனியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்று ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
இந்த தேர்தலில் அதிமுகவினர் வெற்றிபெற்றால் அதிமுகவினராக இருக்கமாட்டார்கள், பாஜகவினராக தான் இருப்பார்கள். அதற்கு உதாரணம் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் தான். எனவே அதிமுகவுக்கு டெபாசிட் கிடைக்காத அளவிற்கு தேர்தல் பணிசெய்யவேண்டும். அதற்கு பிரதமர் மோடியும் நமக்கு உதவி செய்கிறார். எப்போதெல்லாம் மோடி தமிழகம் வருகிறாரோ அப்போதெல்லாம் திமுகவிற்கு வெற்றிதான்.
திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு காமெடி அமைச்சர். சர்க்கஸ் நிகழ்ச்சியில் சிரிக்க வைப்பவர் போல திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று சொன்னதெல்லாம் பொய் என்று ஒத்துக்கொண்டவர் சீனிவாசனால் திண்டுக்கல் மாவட்டத்திற்கு எந்தவொரு பயனும் கிடையாது. குடிமராமத்துப் பணியில் பணத்தை கொள்ளையடித்ததுதான் மிச்சம். எனவே திண்டுக்கல் சீனிவாசனை வீட்டிற்கு அனுப்பி வைக்கவேண்டும்.
தாராபுரம் வந்த பிரதமர் மோடி உண்மையைச் சொல்லாமல் பொய்யை சொல்லி விட்டு சென்றுள்ளார். பிரதமர் உண்மையை தெரிந்து பேச வேண்டும். எழுதிக் கொடுத்ததை எல்லாம் பேசிச்சென்றால் அவர் பிரதமர் கிடையாது. திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற மோடிக்கு பொள்ளாச்சி பெண்கள் பாலியல் விவகாரம் தெரியாதா?. இதை எல்லாம் பிரதமராக இருக்கும் மோடிக்கு தெரியாதா?. திமுக ஆட்சிக்கு வந்ததும் அதிமுகவினரின் ஊழலை கண்டுபிடித்து மக்களிடம் அம்பலப்படுத்துவது தான் எனது வேலை என்று ஸ்டாலின் பேசினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




