59 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன ஒரு எலுமிச்சைபழம்..! காரணம் என்ன..?
விழுப்புரம் மாவட்டத்தில் முருகனின் வேலில் இருந்த எலுமிச்சை பழம் ஒன்று 59 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போய் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வழக்கமாக கோவிலில் பயன்படுத்தப்படும் பொருட்களை வாங்கிச் சென்று வீட்டில் வைத்து வழிபட்டால் குறைகள் தீரும் என்பதும் செல்வங்கள் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் கடவுளுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஏலம் விடுவது வழக்கம். அதே போல ஒரு ஏலம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவிலில் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஒட்டனந்தல் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ரத்தினவேல் முருகன் கோவில் உள்ளது. சின்ன மயிலம் என்றுபக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
விழா நடைபெற்ற ஒவ்வொரு நாளும் முருகனின் பெயரில் ஒரு எலுமிச்சை பழம் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இதனை தொடர்ந்து அந்த பழங்கள் அனைத்தும் ஆண்டுதோறும் ஏலத்தில் விடப்படும். அந்தப் பழங்களை அக்கம்பக்கம் கிராமத்திலுள்ள மக்கள் பலரும் பக்தியோடு வாங்கி சென்று வீட்டில் வைத்து வழிபடுவர்.
இந்தாண்டு நடந்ததில் முதல் நாளன்று முருகனின் வேலில் இருந்த எலுமிச்சை பழத்தை கடலூரை சேர்ந்த தம்பதி ஒருவர் குழந்தை பாக்கியம் வேண்டி அதிகபட்சமாக 59 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்துள்ளனர்.






