கேரளாவில் கொரானோ பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஒன்று முதல் 7-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 31-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் உருவாகி உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது கொரானோ வைரஸ். இந்த நோய்த் தொற்றால், சீனா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நோய்த் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கையும் ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்த கொரானோ பாதிப்பு இந்தியாவையும் இப்போது அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது.நாடு முழுவதும் 52 பேருக்கு கொரானோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கேரளாவில் 6 பேருக்கு ஏற்கனவே நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 6 பேருக்கு கொரானோ பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 31-ந் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரானோ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.