--- --:--:-- --

பகுதிநேர சிறப்பாசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்..! அரசு ஊழியர், ஆசிரியர் நல கூட்டமைப்பு வேண்டுகோள்!!

images

பகுதிநேர சிறப்பாசியர்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

இது தொடர்பாக இந்த கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சா .அருணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

2011-ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் பகுதிநேர சிறப்பாசிரியர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் மற்றும் தையல் ஆசிரியர்கள் என 16,000 சிறப்பாசிரியர்களை மாதம் ரூ, 5000-க்கு வாரம் மூன்று அரை நாட்கள் பணி செய்ய நேரடியாக நியமனம் செய்தது தமிழக அரசு .

 

ஊதிய உயர்வு வழங்கக் கோரிக்கை வைத்ததை ஏற்று நான்காண்டுகள் கழித்து 2015ம் ஆண்டு ரூ.2000 உயர்த்தி ரூ.7000 மாத ஊதியமாக வழங்கியது, அதன் பின் 2017-ம் ஆண்டு மீண்டும் ரூ.700 உயரத்தி மாதம் ரூ.7700 ஊதியமாக இதுநாள் வரை வழங்கப்பட்டு வருகிறது.

பகுதிநேர சிறப்பாசியர்கள் வேலை நாட்கள் வாரத்திற்கு மூன்று அரை நாட்களாகும். இந்த சூழ்நிலையில் எப்படி மற்ற நாட்களில் வேறு இடத்தில் பணி செய்ய அனுமதிப்பார்கள் என்பதை உணரவேண்டும்,
1978-ம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்காக தொழிற்கல்வி தொடங்கப்பட்டு தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமித்தது அப்போதய அரசு .

 

1978-ம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்களை காலமுறை ஊதியத்தில் கொண்டுவந்து நிரந்தரம் செய்து ஆணையிட்டது.

 

2003 -ம் ஆண்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்ட சுமார் 1 லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்த போது, அலுவலக பணிகள் பாதிக்கக் கூடாது என்பதற்காக 15000 இளநிலை உதவியாளர்களை மாதம் ரூ 4000 -க்கு அப்போதைய அரசு, வேலைவாய்ப்பு மூலமாக பதிவுமூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டார்கள்.

 

அலுவலக இளநிலை உதவியாளர்களை தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்தின் மூலமாக தான் பணி நியமணம் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் பின்பு வந்த அரசு அவர்களுக்கு என்று சிறப்பு தேர்வு நடத்தி அனைவரையும் நிரந்தரம் செய்தது.

2004 – 2006 ம் ஆண்டுகளில் நிதிநிலை சரியில்லை என்ற காரணத்தை சுட்டிக்காட்டி 55 ஆயிரம் அனைத்து வகை ஆசிரியர்களையும் அதாவது இடைநிலை ஆசிரியர்களை ரூ 3000/- மாதம் ஊதியமாகவும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.4000/- மாதம் ஊதியமாகவும், முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.4500/- மாதம் ஊதியமாக ஐந்து ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்தது பின்பு வந்த அரசு . 2004 -2006ல் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும் காலமுறை ஊதியத்திற்கு கொண்டுவந்து பணி நிரந்தரப்படுத்தியது பின்பு வந்த அரசு.

 

அதே போன்று 2003 -ம் ஆண்டு எல்காட் மூலமாக 1800 கணினி ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்தார்கள். அவர்கள் அனைவரையும் 2006-ல் வந்த அரசு அவர்களுக்கென்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தனித் தேர்வு நடத்தி பணி நிரந்தரம் செய்தது.

 

அதே போன்று பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சுமார் 16000 பேரை இப்போதுள்ள சட்டத்தின்படி அதாவது கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அவர்களுக்கு என்று சிறப்பு தேர்வை நடத்தி காலமுறை ஊதியத்திற்கு கொண்டு வந்து அவர்களில் வாழ்வில் விளக்கேற்றி வைக்க வருகின்ற சட்டப்பேரவை கூட்டத்தொடர் கல்வி மானிய கோரிக்கையில் அறிவிக்க தமிழக முதல்வரையும்,கல்வி அமைச்சர் அவர்களையும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் என அதன் நிறுவன தலைவர் சா.அருணன் அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon