பிறந்த 6 நாள் ஆன குழந்தையின் மூளையில் இருந்த கட்டி அகற்றம்
பிறந்து ஆறு நாள் ஆன குழந்தையின் மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
ஈரோடு அரசு மருத்துவமனையில் பெரியண்ணன், சரளா தம்பதியினருக்கு கடந்த ஜனவரி 5ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தைக்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. அங்கு கடந்த 11ஆம் தேதி சிறப்பு மருத்துவக் குழு மூலம் குழந்தைக்கு சிகிச்சை தொடங்கப்பட்டது.
தொடர்ந்து 22 ஆம் தேதி நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மேற்கொண்ட 5 மணி நேர அறுவை சிகிச்சையில் கட்டி அகற்றப்பட்டு குழந்தை தற்போது உடல் நலத்துடன் உள்ளது என்று மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




