டிரான்ஸ்பார்மரில் பழுதை சீரமைத்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி ஊழியர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாரிமுனை ஆதியப்பநாயக்கன் தெருவில் மின் வினியோகம் பாதிப்பு தொடர்பாக அப்பகுதி டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை சீரமைக்க வின்சென்ட், உதையா உள்ளிட்ட 4 ஊழியர்கள் சென்றுள்ளனர்.
டிரான்ஸ்பார்மரில் மேலே ஏறி உதையா, வின்சென்ட் ஆகியோர் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். டிரான்ஸ்பார்மரிலேயே தொங்கிக்கொண்டிருந்த வின்சென்ட் உடலை தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர், இதனையடுத்து இருவரது சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
டிரான்ஸ்பார்மரில் மின்சாரத்தை துண்டித்து ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது எப்படி மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்பது குறித்து போலீசாரும், மின் வாரிய அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தாண்டு தினத்தில் மின் ஊழியர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அவர்களுடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.