நாகையில் 15 வயதான சிறுமி சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உயிரிழந்த நிலையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. நாகையை சேர்ந்த அந்த சிறுமி பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும் தோப்புக்கு சென்றதாக தெரிகிறது.
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் அவரை தேடிச் சென்ற போது உடலில் ரத்த காயங்களோடு சிறுமி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் சிறுமி உயிரிழந்துவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிறுமியை யாரேனும் பாலியல் வன்கொடுமை செய்தார்களா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் சிறுமியின் வீட்டின் அருகில் வசிக்கும் கல்யாணசுந்தரம் என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலமானது.
முன்னதாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது கல்யாணசுந்தரமும் உடன் இருந்ததாக தெரிகிறது.
அவரை கைது செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமி தோப்புக்கு சென்றபோது பின்தொடர்ந்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அப்போது சிறுமி கத்தியதால் அவரது தொண்டையை நெரித்து கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.