கடந்த 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். இதனையடுத்து மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் 83 மணி நேரத்திற்கும் மேலாக ஈடுபட்டனர். பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு ஆழ்குழாய் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வந்தது. இதைத்தொடர்ந்து குழந்தை சுர்ஜித் இறந்தது கண்டறியப்பட்டது. பின்னர் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டு சுர்ஜித் உடலை மீட்பதற்கான வேலைகள் நடந்தது.
இதைத்தொடர்ந்து சுஜித்தின் உடல் இன்று காலை 4.30 மணி அளவில் மீட்கப்பட்டது. அப்போது சுர்ஜித்தின் உடல் அழுகிய நிலையில் இருந்ததுடன் சுர்ஜிதின் உடல் இரண்டாக பிரிந்து வந்தது. உடனே அதிகாரிகள் சுர்ஜித்தின் உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மணப்பாறை அரசு மருத்துவமனையில் குழந்தை சுர்ஜித்தின் உடலுக்கு பிரேத பரிசோதனைசெய்து, சுஜித்தின் உடலை அவரது தந்தை பிரிட்டோவிடம் ஒப்படைக்கப்பட்டது.
அப்போது காவல்துறை, மாநில அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் என அனைவரும் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனையின் போது இருந்தனர். சுஜித்தின் உடல் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு மீண்டும் காவல்துறையின் பாதுகாப்புடன் அவருடைய வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சுர்ஜித்தின் பெற்றோரால் கிருத்துவ முறைப்படி இறுதி சடங்குகளை செய்தனர்.பின்னர் அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அதிகாரிகளும், பொதுமக்களும் கண்ணீர் மல்க மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்தனர்.