ஒரு நாள் முன்னதாகவே தொடங்கியது வடகிழக்கு பருவமழை .. கன மழை எச்சரிக்கை

தமிழகத்தில் ஒரு நாள் முன்னதாகவே வட கிழக்கு பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக கனமழை பெய்யும் என்றும் அறிவுக்கப்பட்டுள்ளது.

 

ஜுன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரையிலான தென் மேற்கு பருவ மழையால் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக மழை பெய்தது. கேரளா, கர்நாடகாவில் வெளுத்து வாங்கிய கனமழையால், தமிழகத்தின் முக்கிய அணைகள் நிரம்பின.மேட்டூர் அணையும் இரண்டு முறை நிரம்பியதால் டெல்டா பாசன விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

இந்நிலையில் தென் மேற்கு பருவ மழை இந்தாண்டு அக்டோபர் மத்தி வரை நீடித்து விடைபெற்ற நிலையில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு நாள் முன்னதாக இன்றே தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, தெற்கு ஆந்திரா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என வானிலை மையம் அறிவித்து உள்ளது.

இது குறித்து வானிலை மையத்தின் தென்மண்டல துணைத்தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில்,வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மற்றும் தெற்கு ஆந்திராவில் ஒரு நாளைக்கு முன்னதாக தொடங்குகிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூரில் கனமழை பெய்யும்.

 

17, 18 ந்தேதிகளில் குமரி மற்றும் மாலத்தீவு கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் பூந்தமல்லியில் 11 சென்டிமீட்டர் மழையும் பாம்பனில் 10 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது என பாலச்சந்திரன் தெரிவித்தார். வழக்கமாக அக்டோபர் 20-ந் தேதிக்கு மேல் வடகிழக்கு பருவ மழை தொடங்கும். இந்தாண்டு முன்னதாக நாளை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு நாள் முன்னதாகவே தொடங்கி விட்டது என்றும், மாநிலம் முழுவதும் கன மழை பெய்யும் என்ற அறிவிப்பும் விவசாயிகளை மேலும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply