வேலூர் மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.நாட்டின் 73-ஆவது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றினார். முன்னதாக காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றார். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின உரை நிகழ்த்தினார். அப்போது, சுதந்திரத்திற்கு பாடுபட்ட தமிழக தியாகிகளை நினைவு கூர்ந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தண்ணீர் பிரச்னையை எதிர்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பூண்டி, செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பெருங்குடி ஏரி பாதுகாக்கப்படும். இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி திணிக்கப்பட கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடங்காகக் கொண்டு வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படும்.
கே.வி. குப்பத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்படும். தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்தப்படுகிறது. மக்கள் பயன்பாட்டிற்காக மேலும் 2 ஆயிரம் புதிய பேருந்துகள். இதுவரை 1 கோடி பேர் அத்திவரதரை தரிசித்துள்ளனர். தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.16,000 ஆக உயர்த்தப்படும்.
முதல்வரின் சிறப்பு குறைதீர் திட்டத்தின் மூலம் ஒரு மாத்திற்குள் மனுக்கள் மீது தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கான விருதுகளை முதல்வர் வழங்கினார். 2 புதிய மாவட்டங்களை சேர்த்து தமிழகத்தில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 37ஆக உயர்கிறது.