--- --:--:-- --

ராவத்தூரில் சேதமடைந்துள்ள நொய்யல் ஆற்றுப்பாலம் உடனடியாக உயர்மட்ட பாலமாக மாற்றி அமைக்கப்படும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

Capture1

கோவை மாவட்டம் ராவத்தூரில் சேதமடைந்துள்ள நொய்யல் ஆற்றுப்பாலம் உடனடியாக உயர்மட்ட பாலமாக மாற்றி அமைக்கப்படும் என ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.கோவை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிங்காநல்லூர் வெள்ளலூர் இடையிலான தரைப்பாலம் மற்றும் சூலூர் அருகே உள்ள ராவுத்தூர் கிராம தரைப்பாலம் ஆகியவை சேதமடைந்தது.

 

இந்நிலையில் சூலூர் அருகே உள்ள ராவத்தூர் கிராமத்தில் கனமழையால் சேதமடைந்த நொய்யல் ஆற்றின் பாலத்தை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டார்.பின்னர்,பேசிய அவர்,நீலகிரியில் கடுமையான மழை பொழிவு ஏற்பட்டுள்ளது எனவும்,பேரிடர் மேலாண்மை துறை உயர் அதிகாரிகள் முகாமிட்டு நிவாரண பணிகளை செய்து வருகின்றனர் என தெரிவித்தார்.

 

கோவையிலும் மழை வருவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும்,கோவையில் 275.47 மி.மீட்டர் மழை கோவையில் பெய்துள்ளது எனவும் , இதனால்
கோவையில் சின்ன சின்ன பாதிப்புகள் மட்டுமே ஏற்பட்டு உள்ளது எனவும் தெரிவித்த அமைச்சர் மழையினால் கோவை மக்களுக்கு மகிழ்ச்சிதான் எனவும் தெரிவித்தார்.

40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நொய்யல் ஆற்றில் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது எனவும்,
எல்லா வாய்கால்களும் குளங்களும் தூர்வாரபட்டுள்ளதால் குளங்களில் அதிகமான தண்ணீர் நிரம்பி வருகிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்தாலும் குளங்களுக்கு செல்லும் பாதை சிறியது என்பதால் குளங்கள் மெதுவாக நிரம்பி வருவதாகவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

 

செங்குளத்திற்கு தண்ணீர் வரும் பாதை பாதிப்பு ஏற்பட்டவுடன் உடனடியாக அது சரி செய்யப்பட்டது எனவும் தெரிவித்த அவர்,நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையால் பில்லூர் அணை 97.5 அடி நீர் மட்டம் இருக்கின்றது எனவும் ,சிறுவாணி அணையின் நீர் மட்டம் 43 அடியாக உயர்ந்து இருக்கின்றது எனவும்
கோவையில் உள்ள அனைத்து தடுப்பணைகளும் நிறைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது எனவும், நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்த அவர், பாதுகாப்பு இல்லை என பொது மக்கள் கருதினாலே உடனடியாக நிவாரண முகாம்களுக்கு வந்துவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

 

கோவை மாவட்டத்தில் 1335 பேர் 17 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும்,72 வீடுகள் பாதி சேதமடைந்துள்ளது, 27 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது எனவும்,கோவையில் உள்ள
21 குளங்களில் தண்ணீர் நிரம்பி உள்ளது எனவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

ராவத்தூரில் சேதமடைந்துள்ள மையல் ஆற்றுப் பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றி அமைக்கப்படும் எனவும் இதை இப்போதே உத்தரவாக பிறப்பிப்பதாக அவர் தெரிவித்தார். சிங்காநல்லூர் வெள்ளலூர் இடையிலான பாலம் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தபின் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடப்பதால் கோவையில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வர வில்லை என்பது தவறானது எனவும் தெரிவித்தார். கோவையில் குளக்கரைகளில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இதுவரை அகற்றப்பட்டு அவர்களுக்கு மாற்று வீடு வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon