கடந்த ஏப்ரல் மே மாதங்களில் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், 543 தொகுதிகளில் தமிழகத்தின் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தலானது நிறுத்திவைக்கப்பட்டது. இந்த தொகுதியில், பணம் சிக்கியதால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து தேர்தல் பின்னர் அறிவிக்கப்பட்டு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.ஆகஸ்ட் 5ம் தேதி வாக்குப்பதிவும், ஆகஸ்ட் 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தேர்தலில் 28 பேர் போட்டியிடுகின்றனர்.
வேலூர் தொகுதி தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு வேலூர் தொகுதியில் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வருகிற ஆகஸ்ட் 3 ,4 ,5 மற்றும் 9 ஆகிய தேதிகளில், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.