பிரிட்டனை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 8.7 கோடி ஃபேஸ் புக் பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை முறைகேடாக அணுகியதாக புகார் எழுந்தது. கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டொனால்ட் டிரம்புக்கு சாதகமாக பயன்படுத்துவதற்காக இந்த விவரங்கள் திருடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து அமெரிக்க அரசின் மத்திய வர்த்தக ஆணையம் கடந்த ஆண்டு மார்ச்சில் ஃபேஸ் புக் மீது விசாரணையை தொடங்கியது. பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் பகிரப்பட்டத்தில் விதிமீறல்கள் இருக்கின்றனவா என இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் செட்டில்மண்ட் முறையில் ஃபேஸ் புக் நிறுவனத்திற்கு 35,000 கோடி ரூபாய் அபராதம் விதித்து இந்த விவாகரத்தை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையம் அங்கீகாரம் வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆளும் குடியரசு’ கட்சியை சேர்ந்த மூன்று பேரும், ஜனநாயக கட்சியை சேர்ந்த இரண்டு பேரும் ஆணையத்தில் உறுப்பினர்களாக இருக்கும் நிலையில் இந்த செட்டில்மண்ட் 3 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 2 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்து இருக்கிறார்கள். பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதால்5 பில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கும் செட்டில்மண்ட் வழங்கப்பட்டு இந்த அபராத தொகையுடன் தனிப்பட்ட விவரங்களை ஃபேஸ் புக் எப்படி வேண்டும் என்பது தொடர்பாக கட்டுபாடுகளும் செட்டில்மண்டில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செட்டில்மண்ட் ஒப்பந்தத்தை அமெரிக்க நீதித்துறை இறுதி செய்த பிறகு அடுத்த வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். இந்த விவகாரம் குறித்து அமெரிக்க வர்த்தக ஆணையமோ, ஃபேஸ் புக்கோ கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட நிலையில் 5 பில்லியன் டாலர்கள் அபராதம் என்பது இதுவரை விதிக்கப்பட்டவற்றிலே மிகப்பெரிய தொகையாக இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் செட்டில்மண்ட் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படுவது பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் ஃபேஸ் புக் நிறுவன பங்குகள் 1.8 சதவீதம் உயர்ந்து உள்ளன. அதே சமயம் ஜனநாயக கட்சியில் சேர்ந்த எம்பிக்கள் பலர் இந்த செட்டில்மண்ட் முடிவுக்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த அபராதம் ஃபேஸ் புக்கின் ஆண்டு வருவாயில் ஒரு சிறு பகுதி தான் என்று குறிப்பிட்டுள்ள ஜனநாயக கட்சி எம்பி 5 மாதங்களுக்கு முன்னரே ஃபேஸ் புக்கிற்கு வழங்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் பரிசு என்றும் விமர்சனம் செய்து இருக்கிறார். 5 பில்லியன் டாலர் அபராதம் என்பது ஃபேஸ் புக் நிறுவனத்திற்கு சிறிய தொகை என்றும் அதன் நிறுவனரை தனிப்பட்ட முறையில் பொறுப்பாக்க வேண்டும் என்றும் சில எம்பிக்கள் கூறி உள்ளனர்.






