வைகோ மீதான தேச துரோக வழக்கு: ஜூலை 5 தீர்ப்பு

கடந்த 2009 ஆம் ஆண்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது பதிவான தேசதுரோக வழக்கின் தீர்ப்பு ஜூலை 5 ஆம் தேதி வழங்கப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு உரையாற்றினார்.

 

அப்போது இந்திய அரசுக்கு எதிராகவும்,விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாக வைகோவின் மீது தேச துரோக வழக்கு ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்களின் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் ஒவ்வொரு விசாரணைக்கும் வைகோ நேரில் ஆஜராகி வந்தார்.

 

குற்றச்சாட்டு பிரிவு அரசு தரப்பில் சமர்பிக்கப்பட்ட 9 சாட்சிகளின் விசாரணை,குறுக்கு விசாரணை, எழுத்து பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்வதென அனைத்து நடைமுறைகளும் முடிந்த நிலையில், தீர்ப்பை ஜூலை 5 ஆம் தேதி வழங்குவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.


Leave a Reply