நாளை வெளியாக இருந்த பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் 20 ஆம் தேதி வெளியாகும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு 1 லட்சத்து 13,000 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.அவர்களது சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி கடந்த 13 ஆம் தேதி வரை நடைபெற்றது.
நாளை தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தரவரிசை பட்டியல் வெளியிடும் தேதி 20 ஆக மாற்றப்பட்டுள்ளது.சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராமல் இருந்தவர்கள், சரியான சான்றிதழ்களை கொடுக்கதவறியவர்கள், ஆகியோர் இந்த தேதி மாற்றத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
சான்றிதழ் சாரிபார்ப்பு பணி முழுமை பெறாத காரணத்தினால் தான் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.20 ஆம் தேதியன்று பொறியியல் படிப்புகளில் சேரும் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தரவரிசை பட்டியல் அன்றைய தினம் வெளியாவதால் கலந்தாய்வு தேதி மாற்றப்பட உள்ளது.