கன்னியாகுமாரி மாவட்டம் மார்த்தாண்டம் கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவை ஒட்டி அமைந்துள்ள கன்னியாகுமாரியிலும் கடந்த 5 நாட்களும் மழை பெய்து வரும் நிலையில் மார்த்தாண்டம் கடல் பகுதி சீற்றத்துடன் காணப்படுகிறது.
இதனால் அங்குள்ள துறை மற்றும் நீராடி உள்ளிட்ட கிராமங்களில் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்து வருகிறது. மேலும் கடற்கரையோரம் அமைக்கப்பட்டிருந்த நீராடி சாலையும் சேதமடைந்ததோடு 45 லட்சம் செலவில் கட்டப்பட்ட மீன் ஏலகூடாரமும் மழை நீர் சூழ்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
தற்போது வீடுகள் மற்றும் சாலையை சீரமைக்கும் பணி நடந்து வரும் நிலையில் உடனடியாக தூண்டில் வளைவு அமைத்து ஊரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.