ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் நாடோடி பழங்குடியை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் கடந்த ஜனவரியில் கடத்தப்பட்டு கிராமத்தில் உள்ள கோவிலில் நான்கு நாட்களாக அடைத்து வைக்கபட்டு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அந்த சிறுமியின் உடல் சிதைக்கப்பட்ட நிலையில் கடந்த ஜனவரி மாதம் வனப்பகுதியில் கண்டு எடுக்கப்பட்டது.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் ஒரு சிறுவன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் முக்கிய குற்றவாளியான ஓய்வு பெற்ற வருவாய்த்துறை சஞ்சீராவ் அவரது மகன் விஷால் சாஞ்சீராவ் குடும்பத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன், கூட்டாளி ஆனந்த்தத்தா, சிறப்பு போலீஸ் அதிகாரிகளான தீபக் கஜுரியா, சுரேந்தர் வர்மா ஆகிய ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதே போல வழக்கில் குற்றவாளிகளுக்கு உதவும் வகையில் ஆதாரங்களை அளித்ததாக காவல் துணை ஆய்வாளர் ஆனந்த் தத்தா, தலைமை காவலர் திலக் ராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த எட்டு பேரில் சிறுவன் என்று கூறப்படும் நபர் தவிர மற்ற ஏழு பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றம் சாட்டபட்டவர்களுக்கு ஆதரவாக இருந்த பாஜகவை சேர்ந்த மாநில அமைச்சர்கள் 2 பேர் ஊர்வலத்தில் பங்கேற்றது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.
சிறுமியின் தரப்பு வழக்கு அறிஞராக இருந்த தீபிகா ரஜவத்துக்கும் தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கு பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 3 ஆம் தேதி விசாரணை நிறைவுற்றது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரில் ஆறு பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்தார்.வழக்கின் முக்கிய குற்றவாளியான சஞ்சீராவின் மகன் விஷால் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளான்.