நாகை மாவட்டத்தில், நெல் நாற்று நடப்பட்ட வயலில், குழாய் எரிவாயு பணிக்காக பொக்லைன் இயந்திரம் இறக்கப்பட்டதை பார்த்து, விவசாயிகள் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள், காண்போரை சோகமடைய செய்துள்ளது.
நாகை மாவட்டத்தில், மாதானம் பகுதி முதல், மேமாத்தூர் வரை, கெயில் நிறுவனம் சார்பில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விளை நிலங்கள் வழியாக குழாய் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்; எனினும் பலனில்லை.
இந்த நிலையில், முடுகண்ட நல்லூர் என்ற கிராமத்தில், குறுவை நெல் சாகுபடிக்கு நாற்று நடப்பட்ட வயலில், குழாய் பதிக்கும் பணிக்காக பொக்லைன் இயந்திரங்கள் இறங்கின. வட்டிக்கு கடன் வாங்கி பாடுபட்டு உழைத்து நடப்பட்ட நெல் நாற்றுகளை, பொக்லைன் இயந்திரங்கள் நாசமாக்கி கொண்டிருந்ததை பார்த்து விவசாயிகள் பதறினர்; கதறி அழுதனர்.
இதுதொடர்பான படங்கள் மற்றும் வீடியொ, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, பலரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வருகிறனர்.