தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதிகள்,காலியாக உள்ள 18 சட்டமன்றத்தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 18 அன்று நடைபெற உள்ளது.தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.அதன்பேரில்,50 ஆயிரம் மற்றும் அதற்கும் பணம்,நகை கொண்டு செல்லும்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தால் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும். பறிமுதல் செய்யப்படும் பணம் மற்றும் நகைகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்.10 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக பறிமுதல் செய்யப்படும் பணம் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு அதற்கு முறையாக வரி கட்டப்பட்டுள்ளதா என்ற சோதனைக்கு பின்னர் பணம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத்தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 3 பறக்கும் படை வீதம் 30 குழுக்கள் மட்டுமல்லாது,நிலைக்கண்காணிப்புக்குழு மற்றும் வீடியோ சர்வெயிலென்ஸ் குழுக்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும்,மாவட்ட கலெக்டருமான ராசாமணி தலைமையில் அமைக்கப்பட்டு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.தேர்தல் பறக்கும் படையினரால் மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை 9 கோடி ரூபாய்க்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்,அதில் 3 கோடி ரூபாய் அளவிற்கு உரிய ஆவணங்கள் சமர்பித்த பிறகு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,6.33 கோடி ரூபாய் கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அது மட்டுமல்லாது 100 கிலோ சரக்கரை,3.5 அரிசி,2.5 டன் கோதுமை,0.75 டன் பருப்பு அதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன..மேலும்,2073 மதுபாட்டில்கள்,37 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 15 கிலோ குட்கா,2 கிலோ கஞ்சா,ஏர் பிஸ்டல் 3, இரட்டைக்குழல் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் காலங்களில் மட்டுமே பறிமுதல் செய்யப்படும் பொருள்,பணம்,நகைகள் இவ்வளவு என்றால் அடேங்கப்பா என்கின்றனர் மக்கள்.இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கோவையில் தேர்தல் பறக்கும் படையினரால் 3 ஏர் பிஸ்டல் மற்றும் ஒரு இரட்டைக்குழல் துப்பாக்கி.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் உரிமம் பெற்று துப்பாக்கிகள் பயன்படுத்துவோர் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் அதனை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் ஏர் பிஸ்டல்கள் சிக்கியுள்ள சம்பவம் கோவையின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.இச்சம்பவம் பொதுமக்களிடையே தங்களது பாதுகாப்பு குறித்து கேள்வியை எழுப்பியுள்ளது.