பேட்டரியில் ஓடும் சைக்கிளை கண்டுபிடித்துள்ள தொழிலாளி..!
ஓசூரில் பேட்டரியில் ஓடும் சைக்கிள் ஒன்றை தனியார் தொழிற்சாலையில் தொழிலாளி கண்டுபிடித்துள்ளார். ஓசூர் ஆவலபள்ளி அட்கோபள்ளியை சேர்ந்த பாண்டிய ராஜன் என்பவரை இந்த சைக்கிளைக் கண்டுபிடித்துள்ளார். கனரக தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்துவரும் இவர் ஐடிஐ மெக்கானிக் படித்துள்ளார்.
ஊரடங்கு காலத்தில் தான் பணிபுரியும் தொழிற்சாலைக்கு சென்று வர ஏதுவாக இந்தப் புதிய கண்டுபிடிப்பில் அவர் ஈடுபட்டார். பேட்டரி இயங்காமல் போனாலும் சைக்கிளை சாதாரணமாக ஓட்டிச் செல்ல முடியும். 25 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த சைக்கிளுக்கு தற்போது 12 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.
அரசாங்கம் உதவி செய்தால் இந்த சைக்கிளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லலாம் என்று பாண்டியராஜன் குறிப்பிட்டுள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் இந்த சைக்கிளை பயன்படுத்தினால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பேட்டரி சைக்கிளை கண்டுபிடித்த தனியார் தொழிற்சாலை தொழிலாளிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.






