தமிழகத்தில் தொடரும் கட்டுப்பாடுகள் என்னென்ன? தளர்வுகள் என்னென்ன?
தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் பொது முடக்கத்தில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் என்னென்ன? கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
எனினும் இயன்றவரை வீட்டிலிருந்து பணி புரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள், பெரிய நகைக்கடை, ஜவுளிக்கடை போன்றவை 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். கடைகளில் குளிர்சாதன இயந்திரங்களை இயக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீக்கடைகள், உணவு விடுதிகளில் வரும் 7-ம் தேதி வரை பார்சல் வழங்கலாம் என்றும் எட்டாம் தேதி முதல் ஹோட்டல்களில் அமர்ந்து உணவருந்த அனுமதி அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் நோக்குடன் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ண அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பயணிகளுடன் இயக்கலாம் எனவும், ஆட்டோக்களில் இரண்டு பயணிகளுடன் இயக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள போதிலும் தமிழகம் முழுவதும் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தற்போது உள்ள பொது முடக்க நடைமுறைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






