கொரோனா நோயாளியுடன் 5 நாள் தங்கிய ஓட்டுநர்களின் நிலைமை என்ன?
காவல் துறையினரின் தேடுதல் வேட்டையில் பிடிப்பட்ட வடமாநில மனநோயாளி நிதிஷ்குமார் உடன் தங்கியிருந்த லாரி ஓட்டுநர்கள் 4 பேரை சுகாதார அதிகாரிகள் மதுராந்தகம் மருத்துவமனையில் அனுமதித்து கண்காணித்து வருகின்றனர்.
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரொனா பாதிப்புடன் கடந்த 7ஆம் தேதி தவறுதலாக விடுவிக்கப்பட்ட பிறகு தலைமறைவான நிதிஷ்குமார் மதுராந்தகம் அருகே படாலம் என்ற இடத்தில் வடமாநில லாரி ஓட்டுநர்கள் நான்கு பேருடன் 5 நாள் தங்கி இருந்துள்ளார்.
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த பகுதியை ஆய்வு செய்த சுகாதார அதிகாரிகள் தூய்மைப் பணியாளர்கள் உதவியுடன் அந்த பகுதி முழுவதையும் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்தனர்.
யார் யாரெல்லாம் குறிப்பிட்ட பகுதிக்கு வந்து சென்றார்கள் என்று விசாரணை நடத்திய சுகாதாரத் துறையினர் உடனடியாக அனைவரையும் மருத்துவ கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.







