நடிகர் சுஷாந்த் சிங் நடிகை ரியாவால் போதை மருந்துக்கு அடிமையாக்கப்பட்டாரா?
மர்மமான முறையில் உயிரிழந்த நடிகர் சுஷாந்த் சிங் போதை மருந்துக்கு அடிமையாக்கப்பட்டாரா என்ற கோணத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை திருப்பியுள்ளனர். இதற்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரின் உதவியையும் சிபிஐ நாடியுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டில் நடிகை ரியா சக்கரவர்த்திக்கும் துபாயில் உள்ள போதை பொருள் கடத்தல் கும்பலுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி தகவல் பரிமாற்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில் சுஷாந்த்திற்கு தேநீரில் சில துளிகள் போதை மருந்தை கலந்து கொடுக்கும்படி அறிவுறுத்தியவர்கள் யார் என்று விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் நடிகை ரியா தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியா ஒருநாளும் போதை மருந்து உட்கொண்டவர் இல்லை என்றும் ரத்தப் பரிசோதனைக்கும் அவர் தயார் என்றும் ரியா சக்கரவர்த்தியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சுஷாந்த் சிங்கின் உதவியாளர்கள் மற்றும் சமையல் கலைஞர் நீரஜ் சிங் உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று 5 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர்.





