அடுத்த வல்லரசு இந்தியா..! அதிபர் டிரம்ப்பின் கணிப்பு
இரண்டு நாள் இந்திய பயணத்தின் நிறைவாக டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பல கேள்விகளுக்கு சளைக்காமல் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிலளித்தார். பாகிஸ்தான் குறித்து பிரதமர் மோடியுடன் பேசியதாக கூறியவர் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இரு நாடுகளும் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என கூறினார்.
குடியுரிமை திருத்த சட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த டிரம்ப் அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றார். மக்களுக்கு உகந்த முடிவை மோடி அரசு எடுக்கும் என தான் நம்புவதாக அவர் கூறினார். குடியுரிமை திருத்த சட்டம் குறித்து மோடியுடன் விவாதிக்கவில்லை என்ற டிரம்ப் கடந்த காலங்களில் இந்தியா மத சுதந்திரத்திற்காக கடுமையாக பாடுபட்டு உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்.
இந்திய மக்களுக்கு மத சுதந்திரம் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி விரும்புவதாக திட்டவட்டமாக தெரிவித்த அவர் மோடி ஒரு வலிமையான தலைவர் என பாராட்டினார். தமது இரண்டு நாள் பயணம் குறிப்பிடத்தக்க வகையில் இருந்ததாக குறிப்பிட்ட ட்ரம்ப், எரிசக்தித்துறை உள்ளிட்டவற்றில் இருநாட்டு வர்த்தக உறவுகள் வளர்ந்துள்ளதாக கூறினார்.
அமெரிக்காவிடம் இருந்து இந்திய ராணுவ தளவாடங்கள் வாங்குவது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார்.கொரொனா குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் சீன அரசு அதை கட்டுப்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார். மத அடிப்படையிலான பயங்கரவாதத்தை தம்மை போல வேறு யாரும் ஒழித்தது இல்லை என்றும் கூறினார்.



