--- --:--:-- --

வைப்ரண்ட் வில்லேஜ் விழாவில் பிரதமர் மோடி பேச்சு!

01

நாட்டின் எல்லையோர கிராமங்களே வளர்ச்சியடைந்த இந்தியாவின் அடித்தளம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி ‘வளர்ச்சியடைந்த வைப்ரண்ட் வில்லேஜ் திட்டம் – 2026’ (Vibrant Villages Programme-2026) நிகழ்வில் பங்கேற்ற இளைஞர்களுடன் கலந்துரையாடினார். அப்போது உரையாற்றிய அவர், “நாட்டின் எல்லைகளில் அமைந்துள்ள கிராமங்கள் இனிமேல் இந்தியாவின் ‘கடைசி கிராமங்கள்’ அல்ல; மாறாக அவைதான் நாட்டின் ‘முதல் கிராமங்கள்’ ஆகும்” என்று குறிப்பிட்டார்.

 

ஏனெனில் சூரியனின் முதல் கதிர்களும், நாட்டின் மூவர்ணக் கொடியும் முதன்முதலில் இந்த எல்லைக் கிராமங்களையே வரவேற்கின்றன. இந்த எல்லைக் கிராமங்களே ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற இலக்கின் வலுவான அடித்தளமாக விளங்குகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.இத்திட்டத்தின் பின்னணி குறித்து விளக்கிய பிரதமர், ‘மேரா யுவா பாரத்’ (MY Bharat) தளத்தின் மூலம் நாடு முழுவதும் விண்ணப்பித்த சுமார் 3 லட்சம் இளைஞர்களில் இருந்து 400 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறினார்.

 

 

இந்த இளைஞர்கள் இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் லடாக்கின் எல்லைக் கிராமங்களுக்குச் சென்று, அங்குள்ள மக்களுடன் தங்கி, அவர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு மற்றும் நாட்டுப்பற்றை நேரடியாகக் கண்டு உணர்ந்துள்ளனர். முன்பெல்லாம் இந்த எல்லைப் பகுதிகளில் சாலைகள், மின்சாரம், மருத்துவமனைகள் மற்றும் இணையதள வசதி போன்ற அடிப்படை உள்கட்டமைப்புகள் குறைவாகவே இருந்தன.

 

 

ஆனால், வைப்ரண்ட் வில்லேஜ் திட்டத்தின் கீழ் தற்போது தரமான சாலைகள், குடிநீர் இணைப்புகள், சமையல் எரிவாயு மற்றும் அதிவேக இணைய வசதிகள் அதிவேகமாக வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதோடு, சுற்றுலா வளர்ச்சி அடைந்து உள்ளூர் மக்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளும் வருமானமும் பெருகி வருகின்றன.

 

 

இறுதியாக, 21ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில்தான் உள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, எல்லைக் கிராமங்களுக்குச் சென்று வந்த இளைஞர்கள் தங்களது பயண அனுபவங்களை மேலும் 100 இளைஞர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், தங்களது குடும்பத்தினரையும் நண்பர்களையும் எல்லைப் பகுதி கிராமங்களுக்குச் செல்ல ஊக்குவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Right Menu Icon