அரியர் தேர்வை ரத்து செய்திருக்கும் தமிழக அரசின் முடிவு தவறானது..!
பொறியியல் படிப்புகளுக்கான அரியர் தேர்வை ரத்து செய்திருக்கும் தமிழக அரசின் முடிவு தவறானது என ஏஐசிடிஇயின் தலைவர் அணில் கருத்து தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எழுதிய பதில் கடிதத்தில் அரியர் தேர்வு ரத்து தவறான முடிவு என தான் தெரிவித்திருப்பதாக தகவல் அளித்துள்ளார் .
அரியர் தேர்வு பற்றி ஏஐசிடிஇயும், தமிழக அரசும் பரஸ்பரம் எந்த கடிதப் போக்குவரத்தையும் பகிர்ந்து கொள்ளவில்லை என தெரிவித்தார். தமிழக அரசுக்கு இது குறித்து அதிகாரப்பூர்வமான சுற்றறிக்கை அனுப்பப்படுமா என்ற கேள்வியை முன் வைத்தபோது உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது ஏஐசிடிஇ தனது முடிவை தெரிவிக்கும் என கூறினார்.
இதற்கிடையில் அரியர் தேர்வுகளை நடத்த அரசு தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இதுகுறித்து ஏஐசிடிஇக்கு எந்த கடிதமும் அனுப்பி வைக்கப்பட வில்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.







