பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை சரியே – வருமான வரித்துறை
ஸ்பெக்ட்ரம் மால் வணிக வளாகத்தை சசிகலாவிடம் விற்பனை செய்த விவகாரத்தில் உரிமையாளர்கள் மீது பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது சரியே என வருமான வரித்துறை தெரிவித்தனர். 130 கோடி ரூபாய் மதிப்பிலான மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் தாள்களை பயன்படுத்தி சென்னை பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் வணிக வளாகத்தை சசிகலா வாங்கியதாக புகார் வந்தது.
இந்த விவகாரத்தில் ஸ்பெக்ட்ரம் உரிமையாளர்கள் கங்கா ஃபவுண்டேஷன், பாலாஜி, விஎஸ்ஜெ, தினகரன் மீது பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதனை எதிர்த்து சம்பந்தப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில் நிர்பந்தத்தின் அடிப்படையிலேயே வணிக வளாகத்தை விற்பனை செய்ததால் தங்களுக்கு எதிராக பினாமி சட்டத்தை பயன்படுத்த முடியாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் ஸ்பெக்ட்ரம் மாலுக்கான தொகையை உரிமையாளர்களுக்கு வழங்க மேற்கொண்ட நடைமுறை வாங்குபவரின் பெயர் இல்லாமல் ஒப்பந்தங்கள் மேற்கொண்டது போன்ற நடவடிக்கைகளால் உரிமையாளர்கள் மீது பினாமி சட்டத்தை பயன்படுத்தியது சரியே என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை பிப்ரவரி 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.







