ஆர்டர் செய்த உணவு தாமதமானதை தட்டிக்கேட்ட நபரின் மண்டை உடைப்பு..!
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஆர்டர் செய்த உணவு தாமதமாவது குறித்து தட்டிக்கேட்ட நபரின் மண்டையை உடைத்த ஹோட்டல் நிர்வாகத்தின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் அர்ச்சனா உணவகத்துக்கு சாப்பிட வந்த சுரேஷ் – கவிதா தம்பதி சப்பாத்தி ஆர்டர் செய்துள்ளனர்.
நீண்ட நேரமாகியும் சப்பாத்தி வராதது குறித்து சுரேஷ் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு உணவகம் மேலாளர் ரவி என்பவர் ஊழியர்களுடன் சேர்ந்து சுரேஷை சமையலறைக்குள் இழுத்து சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் சுரேஷின் மண்டை உடைந்தது. சம்பவம் குறித்த புகாரின் பேரில் அர்ச்சனா உணவகத்தின் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.







