கட்சியில் இணைந்த தொண்டர்கள் துண்டுக்கு மல்லு கட்டு !
2021 – தமிழக சட்ட மன்ற தேர்தல் களம் தற்போதே கலை கட்டியுள்ளது. அ.தி.மு.க வினர் தி.மு.க விற்கும் , தி.மு.க வினர் அ.தி.மு.கவிற்கும் என மாறி, மாறி கட்சியில் இணைந்து வருகின்றனர். இதனால் தேர்தல் பரபரப்பு தற்போதே துவங்கியுள்ளது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமமுக மற்றும் பி.ஜே.பி யினர் அ.தி.மு.கவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 500 க்கும் மேற்பட்ட நபர்கள் கட்சியில் இணைந்தனர். இதில் அமைச்சர் ஜி.பாஸ்கரன், அதிமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ நாகராஜன் உள்ளிட்டோர் தலைமை ஏற்றனர்.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் தலைமையில் அதிகளவு பி.ஜே.பி யில் இருந்து அதிமுகவில் இணைந்தனர். அப்போது கட்சியினருக்கு அதிமுக கொடி வண்ணத்தில் துண்டு கொடுக்கப்பட்டது. இதனை தொண்டர்கள் வாங்குவதற்கு சண்டை போட்டுக் கொண்டது களேபரத்தை ஏற்படுத்தியது.
ஒவ்வொரு தொண்டர்களும் துண்டுக்கு மல்லு கட்டியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு துண்டுக்கா இப்படி சண்டை போடனும் என அமைச்சர் டெண்சனில் கிளம்பினாராம். நிகழ்ச்சிக்கு முன்னதாக மங்கல இசையுடன் மானாமதுரை நகர் பகுதியில் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வளம் வந்தனர்.

பெரும் நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்த எம்.எல்.ஏ நாகராஜன் கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பால் கட்சி நிர்வாகிகளை கடிந்து பேசினாராம்.







