கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் சிகிச்சைக்காக தயாராகும் ரயில் பெட்டிகள்
கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரயில்வே பெட்டிகளை தனி வார்டுகளாக மாற்றி தர ரயில்வே முன்வந்துள்ளது. இந்திய ரயில்வே நாளொன்றுக்கு 13,573 ரயில்களை இயக்கி வருகிறது. கொரொனா பரவலை தடுப்பதற்காக வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வரை அனைத்து பயணிகள் ரயிலையும் ரயில்வே ரத்து செய்துள்ளது.
இந்நிலையில் ரயில்வே அமைச்சருடன் ரயில்வே வாரிய தலைவர் அனைத்து மண்டலங்கள் மற்றும் கோட்டங்களில் ரயில்வே பொது மேலாளர் கலந்துகொண்டு காலியாக இருக்கும் ரயில் பெட்டிகளை கொரொனாவிற்கு அவசர சிகிச்சை அளிக்கும் வார்டுகளாக மாற்றுவது குறித்து பரிசீலித்தனர்.
மேலும் கொரொனா சிகிச்சைக்கு உதவும் வெண்டிலேட்டர்கள், மருத்துவமனை படுக்கைகள், நோயாளிகளை அழைத்துச் செல்வதற்கான சாலைகள் உள்ளிட்ட மருத்துவத்துறையின் அத்தியாவசிய உபகரணங்களை உற்பத்தி செய்வது குறித்தும் விவாதித்தனர்.
நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதை அடுத்து நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான புதிய வழிகளை ஆராயும்படி பிரதமர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ரயில்வே அமைச்சகம் சார்பில் இந்த ஆலோசனை முன் வைக்கப்பட்டதாக தெரிகிறது.
உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் மூன்று படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி இரு படுக்கைகளை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.







