இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம் 1’ இன்று விண்ணில் பாய்கிறது!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் ’விக்ரம் 1’ என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது. ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், தன்னுடைய ஆர்பிட்டல் ராக்கெட்டை முழுவதுமாக இலகுரக கார்பனால் உருவாக்கியுள்ளது. மேலும், மூன்று திட எரிபொருள் நிலைகள் மற்றும் ஒரு திரவ சுற்றுப்பாதை சரிசெய்தல் தொகுதி ஆகியவற்றால் இயங்கும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைத்துள்ளது.
இது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தனியார் ராக்கெட் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 11.30 மணியளவில் ஏவப்படுகிறது. ’விக்ரம் 1’ ராக்கெட் வாயிலாக, கிரஹா ஸ்பேஸ் (Grahaa Space), காஸ்மோ சர்வ் (Cosmoserve), டிகியூப்ட் (DCubed) மற்றும் ஸ்கைரூட் (Skyroot)-இன் (SCOPE) ஆகிய தொழில்நுட்ப கருவிகள் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
இதுதவிர, பெங்களூருவைச் சேர்ந்த காஸ்மோஸ் டைமண்ட் (Cosmos Diamonds)-இன் படைப்பான காஸ்மிக் ப்ளூம் (Cosmic Bloom) போன்ற மைக்ரோ வகை தொழில்நுட்ப சாதனங்களும் அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன. இஸ்ரோவில் இருந்து ஏவப்படும் முதல் தனியார் ராக்கெட் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.






