தர்ணாவுக்கு பின் லக்கிம்பூர் சென்ற ராகுல் காந்தி..!
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் செல்வதற்காக சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
லக்கிம்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திப்பதற்கு ராகுல் காந்தி பிரியங்கா காந்தி உள்ளிட்ட 5 பேருக்கு உத்தரபிரதேச மாநில அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து விமான நிலையம் சென்ற ராகுல் காந்திக்கு அங்கிருந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் வரவேற்பளித்தனர்.
எனினும் அரசு வழங்கும் வாகனத்தில் மட்டுமே லக்கிம்பூர் செல்ல வேண்டும் என்றும் சொந்த வாகனத்தில் ராகுல் செல்ல கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. மேலும் விமான நிலையத்தில் இருந்த அவரை வெளியேற விடாமல் அங்கிருந்து பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஆவேசமடைந்த ராகுல்காந்தி விமான நிலையத்திற்கு உள்ளேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து அவர் லக்கிம்பூர் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் பஞ்சாப் முதலமைச்சர் மற்றும் சத்தீஸ்கர் முதலமைச்சர் ஆகியோருடன் காரில் புறப்பட்டு சென்றார்.






