நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது..!
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆரோக்கியமான முறையில் விவாதம் நடத்த அரசு தயார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் அடுத்த மாதம் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து விவாதிக்க நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார். கூட்டத்தில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட 33 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
திமுக சார்பில் அந்தக் கட்சியின் மக்களவை குழு தலைவர் டி ஆர் பாலு மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றனர். அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி இந்த கூட்டத் தொடரில் அனைத்து முக்கிய விவகாரங்கள் குறித்தும் ஆரோக்கியமான அர்த்தமுள்ள விவாதம் நடத்த அரசு தயாராக இருப்பதாக பிரதமர் தெரிவித்ததாக கூறினார்.
19 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் 30க்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேநேரம் எரிபொருள் விலை உயர்வு சீனாவுடனான எல்லை பிரச்சினை உள்ளிட்டவை குறித்து பிரச்சினை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.






