கரூர் விவகாரத்தில் வழக்கை திரும்ப பெற்ற திமுக..!
கரூர் கூட்ட நெரிசல் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை திமுக திரும்பப் பெற்றுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தவெக பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்த சம்பவம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசினார்.
கரூர் சம்பவத்திற்கு கடந்த திமுக அரசே காரணம் என அவர் பேசியிருந்தார். அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த திமுக, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மேலும் கரூர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் பேச தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், அதில் தலையிடும் விதமாக பேசி வருவதாகவும், எனவே இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்றும் திமுக கோரிக்கை வைத்தது.
விடுமுறை அமர்வு நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா, சீல் நாகு ஆகியோர் அமர்வில் முறையீடு செய்யப்பட்ட நிலையில், அதனை ஏற்று இன்று அவசர வழக்காக உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடத்தப்பட்டது. சுதந்திரமான பேச்சுக்கு தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் திமுகவிற்கு கேள்விகளை எழுப்பியது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் முதல்வர் விஜய் மீது எப்.ஐ.ஆர் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தேவை இல்லாமல் அரசியல் செய்ய வேண்டாமென்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். முதல்வரின் பேச்சை ஒழுங்குபடுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென கூறுகிறார்களா என்றும் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கை ஏன் தள்ளுபடி செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் வழக்கை திரும்பப் பெற திமுக முடிவு செய்துள்ளது. இதையடுத்து வரும் 10 ஆம் தேதி முதலமைச்சர் விஜய் கரூர் செல்ல எந்த சிக்கலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.





