அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்!
காங்கேயம் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளகோவில் நகர திமுக கழக அலுவலகத்தில் ஒரு மெகா ‘இணைப்பு விழா’ நடந்தது.
வெள்ளகோவில்: தேர்தல் ஜூரம் தகிக்கும் வேளையில், கொங்கு மண்டல அரசியலில் ஒரு அதிரடி ‘மூவ்’ அரங்கேறியிருக்கிறது. காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பம்பரமாகச் சுழன்று வாக்கு சேகரித்து வரும் நிலையில், மாற்றுக் கட்சிக் கோட்டைகளில் சரிவு தொடங்க ஆரம்பித்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக, கடந்த 31-3-26 அன்று திருப்பூர் கிழக்கு மாவட்டம், காங்கேயம் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளகோவில் நகர திமுக கழக அலுவலகத்தில் ஒரு மெகா ‘இணைப்பு விழா’ நடந்தது.
கழன்ற நிர்வாகிகள்… கைகோர்த்த உடன்பிறப்புகள்
திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சருமான மு.பெ. சாமிநாதன் தலைமையில், திருப்பூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் இல.பத்மநாபன் முன்னிலையில் இந்த நிகழ்வு அரங்கேறியது.
இதில், த.வெ.க, அஇஅதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், அதிரடியாகத் தங்கள் கட்சிகளிலிருந்து விலகி, ‘தாய் கழகமான’ திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

வெற்றி முழக்கம்!
நிகழ்ச்சியில் பேசிய புதிய நிர்வாகிகள், “வரும் தேர்தலில் திமுகவின் பிரம்மாண்ட வெற்றிக்குத் தோள் கொடுத்து பாடுபடுவோம்” என உறுதி படத் தெரிவித்தனர். இந்த விழாவில் திமுக மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய நகரக் கழகச் செயலாளர்கள் மற்றும் ஏராளமான கழக உடன்பிறப்புகள் திரண்டு வந்து, புதிய நிர்வாகிகளை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
எதிர்க்கட்சிகளின் கூடாரத்திலிருந்து முக்கிய விக்கெட்டுகள் சரிந்திருப்பது, காங்கேயம் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





