--- --:--:-- --

மின்துறை அமைச்சர் பேச்சுக்கு தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு !

thangamani

கேங்மேன் பதவி தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது மின் துறை அமைச்சர் பேசியதற்கு தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு.உயர் நீதிமன்றத்தில் கேங்மேன் பதவி தொடர்பான வழக்கு கடந்த ஏப்ரல் 24ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறுவதற்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டது. மேலும் புதிய பணிநியமனம் தொடர்பாக எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு போன்ற எந்தவொரு நடவடிக்கைகளையும் எடுக்கக்கூடாது என்று மின்வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கு ஜூன் மாதத்தில் விசாரணைக்கு வரும் அதுவரை கேங்மேன் பதவி தொடர்பாக எந்தவொரு நடவடிக்கை எடுக்க கூடாது என்ற நிலையில் மின்துறை அமைச்சர் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

 

இது குறித்து திருப்பூர் மாவட்ட அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் அ. சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாடு மின்வாரியத்தில் வெளி மாநிலத்தவர்கள் உதவிப்பொறியாளராக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.இந்த விசயத்தில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி நடப்பதாக மின்துறை அமைச்சர் கூறி உள்ளார் ஆனால் உண்மை என்னவென்றால் ஆளுகின்ற அதிமுக அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு பிறப்பித்த தவறான கொள்கைகளால் தான் தற்போது தமிழகத்தில் பொறியியல் படித்த இளைஞர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதை மறைத்து அமைச்சர் பேசி வருவதை தொமுச வன்மையாக கண்டிக்கிறது.

 

மின்வாரியத்தில் தற்போது சுமார் 42,000 காலி பணியிடங்கள் உள்ளது. வாரியத்தில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக கடந்த பல ஆண்டுகளாகவே கம்பங்கள் நடுதல், மின் மாற்றி அமைத்தல், மின் தடை சரிசெய்தல் உட்பட பணிகளை பிரிவு அலுவலகங்களில் ஒப்பந்த தொழிலாளர்கள் தான் பணி செய்துவருகின்றனர் .அதிமுக அரசும் மின்வாரியமும் சேர்ந்து தமிழக வரலாற்றில் இல்லாத ‘கேங்மேன்’ என்ற 5,000 பதவிகளை உருவாக்கி இதன் மூலம் பல ஆயிரம் கோடிகளை வசூல் செய்யவும் தகுதியற்றவர்களை பணியில் அமர்த்த ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் விரும்பும் நபர்களை கொண்டு பணம் வசூல் செய்யவும் வழிவகுத்துள்ளது. இதன் மூலம் மின்வாரியமும் ஆளும் கட்சியும் விரும்புவோரை பணியில் சேர்த்திட திட்டம் தீட்டி உள்ளதாக தெரிகிறது.

 

இதன் மூலம் மின்வாரியமும் ஆளும் கட்சியும் விரும்புவோரை பணியில் சேர்த்திட திட்டம் தீட்டி உள்ளதாக தெரிகிறது முதலில் கேங்மேன் பதவிக்கு பயிற்சி காலத்திற்கு 15,000 ரூபாய் சம்பளம் என்பது இது வரை வரலாற்றில் இல்லாத ஒன்றாகும் இதை பார்க்கும் போது பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்து தினக்கூலியாக 380 ரூபாய் தான் சம்பளம் கேட்கும் போது அவர்களை பணிநிரந்தரம் செய்யாமல் மின்வாரியமும் ஆளும் கட்சியும் தனக்கு வேண்டியப்பட்டவர்களை மட்டும் பணம் வசூல் செய்து மின்வாரியத்தில் கண் துடைப்பு தேர்வு மூலம் நுழைந்திடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்பது கண்டிக்கத்தக்கது.

இப்பதவிக்கு இணையத்தளம் வாயிலாக கடந்த மார்ச் 22ம் தேதி முதல் பதிவு செய்யலாம் என்றும் ரூ.15,000 சம்பளம் என்றும் கடந்த மார்ச் 7ம் தேதி அறிவித்தது.இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது குறிப்பாக திருப்பூர் மாவட்ட தொமுச சார்பில் கேங்மேன் பதவியை தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது . இந்நிலையில் சில குறிப்பிட்ட தொழிற்சங்கங்களும் கேங்மேன் பதவிக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்துஉள்ளனர்.

 

அதேபோல் மின்வாரியத்தில் புதிய இணைப்பு மின் கம்பங்கள் டிரான்பார்மர்கள், மின் தடை சரிசெய்தல் போன்ற பணிகளுக்கு ஏற்கனவே உள்ள சீ. எல், டி.சி.எல், மஸ்தூர், எல்பர், வயர்மேன், போன்ற பதவிகள் நடைமுறையில் இருக்கும் நிலையில் சுமார் 42 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக இப்பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள் தான் பணிபுரிந்து வருகிறார்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்று பணிநிரந்தரம் செய்ய உத்தரவு பெற்றனர். இந்நிலையில் எதையும் மதிக்காமல் இந்த அதிமுக அரசும் மின்வாரியமும் தொழிலாளர் விரோத போக்கில் செயல்பட்டு தமிழக வரலாற்றில் இல்லாத பதவி கேங்மேன் என்ற பதவியை ஒன்றை உருவாக்கி 5 ஆயிரம் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 07 ம் தேதி மின்வாரியம் வெளியிட்டது இதை எதிர்த்து திருப்பூர் மாவட்ட தொமுச உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் உயர் நீதிமன்றத்தில் கேங்மேன் பதவியை ரத்து செய்ய கோரி வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

 

அந்த வழக்கு எதிர் வரும் 13 ம் தேதி விசாரணைக்கு வருகிறது இந்த நிலையில் மின் துறை அமைச்சர் தொழிலாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தவறான தகவல்களை கூறி வருகின்றார். அவர் (07-06-2019) வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கேங்மேன் பதவியில் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளார். இதை தொமுச கண்டிக்கிறது. மேலும் கடந்த காலங்களில் தானே, ஒக்கி, கஜா ஆகிய புயல் ஏற்பட்ட போது பணியாற்றிய ஒப்பந்தப் பணியாளர்களை சந்தித்து பணிநிரந்தரம் செய்வதாக கூறினார்.

 

ஆனால் தற்போது வரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை குறிப்பாக தற்போது மின்வாரியம் உருவாக்கி உள்ள கேங்மேன் பதவிக்கு பதிவு செய்ய வயது வரம்பு 35 என்றும் 5ம் வகுப்பு முதல் எந்த படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. தற்போது மின்வாரியத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் வயது சுமார் 40 அதற்கும் மேல் உள்ளது அவர்கள் எப்படி விண்ணப்பிபார்கள் என்ற கேள்வி எழுகிறது. மேலும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம் தொடர்பாக தொழிலாளர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று உத்தரவு பெற்ற பிறகும் தற்போது வரை அவர்களை இந்த அரசு பணிநிரந்தரம் செய்யாமல் காலம் கடத்தி வந்த நிலையில் தற்போது மின்வாரியத்தில் இல்லாத கேங்மேன் பதவியை உருவாக்கி அதிலும் வெளி மாநிலத்தவர்களை பணியில் அமர்த்த சதி நடந்த வருகிறது.

 

தொடர்ந்து மின் துறை அமைச்சர் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம் தொடர்பாக முன்னுக்கு பின் முரணாக பேசி வருவதை நிறுத்த வேண்டும் உடனடியாக கேங்மேன் பதவியை ரத்து செய்து நீதிமன்ற உத்தரவு படி ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்த வேண்டும். தற்போது கேங்மேன் பதவி தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மின் துறை அமைச்சர் இது குறித்து பேசி வருவது நீதிமன்ற அவமதிப்பாகும் உடனடியாக கேங்மேன் பதவியை ரத்து செய்து விட்டு ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் இதே நிலை நீடித்தால் போராட்டம் நடத்தப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon