இன்று இந்த 8 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை..!
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனத் தெரிவித்துள்ள வானிலை மையம், சென்னையில் இன்று 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவிற்கு வெயில் கொளுத்தும் எனக் கணித்துள்ளது. தெலங்கானா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் எனவும், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களின் மலைப் பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என கணித்துள்ள வானிலை மையம், நாளை மறுநாள் நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அதிகபட்சமாக இன்று 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் காரணத்தால், ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
அதே போல், தமிழ்நாட்டில் வரும் 5-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை உயரக்கூடும் என்றும், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.





