தந்தை மகன் கொலை வழக்கு : கைது நடவடிக்கை குறித்து டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை
சாத்தான்குளம் தந்தை மகன் காவல்துறையினரால் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட வழக்கு ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தால் கைது நடவடிக்கை குறித்து டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அனைத்து மாநகர காவல் ஆணையர், மாவட்ட எஸ்பிக்களுக்கு அவர் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கையில் 7 அல்லது அதற்கு குறைவான ஆண்டுகள் சிறை தண்டனை உள்ள குற்றங்களில் காரணம் இன்றி கைது செய்யக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து கைது செய்வதற்கான அவசியத்தை எழுத்துப்பூர்வமாக விசாரணை அதிகாரி முதலில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யாத அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
கைதி ஏன் சிறையில் அடைக்கப்படுகிறார் என்பதற்கு உரிய விளக்கத்தை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.






