முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு திடீர் தடை! உடனடியாக அமல்படுத்தியது இலங்கை
தொடர் குண்டு வெடிப்பை அடுத்து, பாதுகாப்பு கருதி இலங்கையில், புர்கா எனப்படும் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை விதித்து, அந்நாட்டு அதிபர் சிறிசேனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அண்டை நாடான இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து, 300க்கும் மேற்பட்டோர் இறந்தனர். பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரத்திற்கு பிறகும் கூட இன்னமும் பதற்றம் தணியவில்லை.
இந்த நிலையில், குற்றவாளிகளுக்கு இடம் தரக்கூடாது என்ற நோக்கில், பாதுகாப்பு கருதி இலங்கையில், புர்கா எனப்படும் முகத்தை மூடும் உடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முகத்தை மறைக்கும் ஆடைகள் அல்லது அடையாளங்களை மக்கள் அணிய தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பிற்காக இந்த தடை அமலுக்கு வருகிறது. அவசரகால ஒழுங்குமுறைகளின் கீழ் இந்த தடை அமலுக்கு வந்துள்ளதாக, அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, குண்டு வைத்த சதியாளர்களுக்கு எதிராக ராணுவம் தொடர்ந்து நாடு முழுவதும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




