எம்ஜிஆர்., விஜயகாந்த் வேடமிட்டு கட்சியினர் ஓட்டு வேட்டை
எம்.ஜி்.ஆர்,விஜயகாந்த் வேடமிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தி அரசியல் கட்சியினர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18 அன்று மக்களவை தேர்தல், காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் களை கட்ட துவங்கியுள்ளது.

இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர் தலைமையில் எம்.ஜி.ஆர், விஜயகாந்த் வேடமிட்டு சினிமா பாடல்களுக்கு நடனமாடி வாக்குகளை சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள ஊமப்பாளையம், ஒடந்துறை உள்ளிட்ட பகுதிகளில் எம்.ஜி.ஆர், விஜயகாந்த் வேடமிட்ட நபர்கள் சினிமா பாடல்களுக்கு நடனமாடி பொதுமக்களிடையே வாக்குகளை சேகரித்தனர்.
இந்நிகழ்ச்சியை சிறுவர்,சிறுமிகள் உட்பட பொதுமக்கள் பலர் வெகுவாக ரசித்தனர். தலைவர்களை போல வேடமிட்டு நடனமாடியதை கண்ட ஒருவர், கூட்டத்தினர் இடையே தானும் ஆடியது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
– விஜயகுமார், கோவை.





