இரட்டை இலை சின்னம் வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு..!
இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ்-ஸின் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக கொடியை பயன்படுத்துவது தொடா்பான தங்களது புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் விசாரணையில், இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி சச்சின் தத்தா அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று பகல் 3 மணிக்குள் எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடைவிதிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில், அதிமுக சின்னம் மற்றும் கொடியைப் பயன்படுத்த ஓபிஎஸ்-ஸுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில், வழக்கில் நாளை மறுதினம் பிற்பகலில் தீர்ப்பளிக்கப்படும் என்று நீதிபதி என்.சதீஷ்குமார் அறிவித்துள்ளார்.





