பிரதமர், முதலமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கு கொரொனா தடுப்பூசி..!
தடுப்பூசி அளித்து உதவுமாறு வெளிநாடுகள் இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுப்பதாகவும் ஆனால் நம் நாட்டிலேயே சிலர் அவற்றை போட்டுக் கொள்ள தயங்குவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பாதுகாப்பானது என்பதற்கான விழிப்புணர்வு போஸ்டர்களை டெல்லியில் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிமுகப்படுத்தி வைத்தார். இதன் பின் பேசிய அவர் நம் நாட்டில் சிலர் தவறான தகவல்கள், சந்தேகங்களும், குறுகிய நோக்கம் கொண்ட அரசியல் பிரச்சாரங்களாலும், தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்குவதாக தெரிவித்தார்.
இந்திய தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்று உறுதியளித்து அமைச்சர் ஊசி போட்டு கொள்பவர் தனக்கு தொற்று ஏற்படாமல் தடுத்துக் கொள்வதன் மூலம் அடுத்தவருக்கு பரவுவதையும் தடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.
எனவே தடுப்பூசி குறித்த தவறான பிரச்சாரங்களை புறம் தள்ள அரசின் அறிவுரையை பின்பற்ற வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையில் இரண்டாவது கட்ட தடுப்பூசி திட்டத்தின் போது பிரதமர், மாநில முதலமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் அதை போட்டுக் கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதல் முன் களப் பணியாளர்களுக்கு ஊசி போடப்படும் நிலையில், இரண்டாவது கட்டத்தில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.







