கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் பழனிசாமி..!
கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டு துவக்கி வைத்தார்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் சான்றுகளை காட்சிப்படுத்தும் விதமாக ரூ. 12 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டிலான உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்திற்கு தமிழக முதல்வர் பழனிசாமி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டு துவக்கி வைத்தார்.
கீழடியில் தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் விதமாக நடைபெற்ற அகழ்வாய்வு பணியில் கிமு 2600 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஏராளமான சான்றுகள் கிடைக்கப் பெற்றன. தற்போது ஆறாம் கட்ட அகலாய்வு பணி கீழடி கொந்தகை மணலூர் அகரம் உள்ளிட்ட நான்கு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
முன்னதாக கீழடியில் 5 கட்ட அகழ்வாய்வில் நேர்த்தியாக கட்டப்பட்ட சுட்ட செங்கற்கள் ஆன சுவர்கள், மண்பாண்டங்கள், பிராமி எழுத்துக்களின் கூடிய பானை ஓடுகள், பாசி மணிகள், கண்ணாடியிலான அணிகலன்கள், தந்தத்திலான சீப்பு, தாயக்கட்டை உறைகிணறு குடிநீர் வடிகால் பகுதி என எண்ணற்ற சான்றுகள் கிடைக்கப் பெற்றன.

இவற்றின் மூலம் கனிம வேதியியல் ஆய்வுக்குப் பின்னர் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பது உறுதிசெய்யப்பட்டது. இங்கு கிடைக்கப்பெற்ற சுமார் 14000 பொருட்களைக்கொண்டு கீழடி அரசு பள்ளி விளையாட்டு மைதானம் அருகே அருகே சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.12 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்திற்கு தமிழக முதல்வர் பழனிசாமி இன்று அடிக்கல் நட்டு துவக்கி வைத்தார்.
இங்கு 36 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் கட்டப்படும் அருங்காட்சியகத்தில், முப்பரிமாண கூடத்தில் ஒலி ஒளி அமைப்புடன் கூடிய 6 காட்சிக்கூடம் ஒரு வருட காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என தொல்லியல் இணை இயக்குனர் சிவானந்தம் தெரிவித்தார். இதன் மூலம் தமிழர்கள் பெருமை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் என்பதுடன் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட ஏதுவாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
கீழடியில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரிய துறை அமைச்சர் பாஸ்கரன், தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம், மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






