10 நாட்கள் பயணமாக லண்டன் புறப்பட்டுச் சென்றார் மு.க.ஸ்டாலின்!
10 நாட்கள் பயணமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பேரனும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள கல்லூரியில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான உயர் படிப்பை முடித்துள்ளார். அவர் படித்த கல்லூரி பட்டமளிப்பு விழா, இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக மு.க. ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஆகியோருடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் லண்டன் புறப்பட்டுச் சென்றார். அவரை விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். பேரனின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிறகு, மு.க.ஸ்டாலின், லண்டனிலேயே 10 நாட்கள் வரை தங்கி ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளார். அதன்பிறகு ஜூலை 20 ஆம் தேதி அவர் சென்னை திரும்ப உள்ளார்.
இந்த பயணம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், நாங்க இருக்கோம். மீண்டும் வருவோம் என்பது தான் அறிவாலயத்தில் தான் கேட்கும் தொண்டர்களின் குரல் என்று பதிவிட்டுள்ளார். தொண்டர்களின் உணர்வுகளை உள்வாங்கி, திமுகவின் அடுத்த நூறாண்டுகளுக்கான பயணத்தைத் திட்டமிடும் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், இருவாரப் பயணமாக அயலகம் செல்வதாகவும், அயலகத்தில் இருந்தாலும் அறிவாலயத்தில்தான் தனது மனம் இருக்கும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.





