உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : சீறிப் பாய்ந்த அமைச்சர் விஜயபாஸ்கரின் ‘கொம்பன்’ ‘சின்னக்கொம்பன்’ காளைகள்!!
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போட்டி தொடக்கத்திலேயே சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன், சின்னக்கொம்பன் ஆகிய காளைகள் சீறிப் பாய்ந்து வீரர்களுக்கு போக்கு காட்டின.
தைப்பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டு தோறும் களை கட்டுவது வழக்கம். பொங்கல் நாளில் அவனியாபுரம், அடுத்த நாளான மாட்டுப்பொங்கல் தினத்தன்று பாலமேடு ஆகிய இடங்களில் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்தன. இன்று காணும் பொங்கல் நாளில், உலகப் புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கி நடை பெற்று வருகிறது. 700 காளைகள் 900-க்கும் மேற்பட்ட காளையர்கள் பங்கேற்றுள்ள இந்த ஜல்லிக்கடைக் காண வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் திரண்டுள்ளனர்.
அலங்கா ஒல்லூர் ஜல்லிக்கட்டு காலை 8 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அரை மணி நேரம் முன்னதாக தொடங்கியது. தொடக்கத்திலேயே நாலு கால் பாய்ச்சலில் சீறிப் பாய்ந்த காளைகள் வீரர்களை கதிகலங்க வைத்தன.அதிலும் அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன், சின்னக்கொம்பன் காளைகள் அடுத்தடுத்து அவிழ்த்து விடப்பட்டு, பிடித்தால் ஏராளமான பரிசுகள் என அறிவிக்கப்பட்டது. வீரர்களும் தில்லாக அடக்க முண்டியடித்தாலும், சீறிப் பாய்ந்த இரு காளைகளும் வீரர்களுக்கு போக்கு காட்டி துள்ளிப் பாய்ந்து சென்றன. இந்த ஜல்லிக்கட்டில் சில காளைகள் எங்கே பிடித்துப் பார் என்று களத்தில் சுற்றிச் சுற்றி வந்து வீரர்களை துரத்தி துரத்தி விரட்டிய காட்சி மெய் சிலிர்க்க வைத்தது.
இந்த ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கம், வெள்ளி காசுகள், சைக்கிள் முதல் பைக், கார் வரையும், குக்கர், பீரோ, கட்டில், வாஷிங் மெஷின், அண்டா, குண்டா, பட்டுச்சேலைகள் டிசர்ட் என விதவிதமான பரிசுகள் ஏராளமான வாரி வழங்கப்படுகின்றன.
மாலை 5 மணி வரை இடைவிடாது நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் முத்தாய்ப்பாக அதிக காளைகளை அடக்கி சிறந்த வீரராக தேர்வு செய்யப்படும் வீரருக்கு முதல்வர் இபிஎஸ் சார்பில் காரும், சிறந்த காளையின் உரிமையாளருக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் சார்பில் காரும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.






