அடர்ந்த காட்டுக்குள் காணாமல் போன கேரள இளம் பெண்..!
கர்நாடக மாநிலத்தின் கொடகு மாவட்டம் பகுதியில் உள்ள தடியண்டமோல் மலை சுற்றுவட்டார அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நான்கு நாட்கள் காணாமல் போன நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 36 வயதான ஜி.எஸ். சரண்யா, “எப்படியோ வழி தவறிவிட்டேன், ஆனால் ஒரு கணமும் பயப்படவில்லை” என்று தெரிவித்தது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கோழிக்கோடு மாவட்டம் நாடபுரத்தைச் சேர்ந்த அவர், மிகவும் அமைதியாகவும் தன்னம்பிக்கையுடனும் மீட்புக் குழுவினரை நோக்கி நடந்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏப்ரல் 2ஆம் தேதி, ஒரு வழிகாட்டி மற்றும் 10 பேர் கொண்ட மலையேற்றக் குழுவுடன் தடியண்டமோல் சிகரத்திற்குப் பயணம் மேற்கொண்ட அவர், காலை 7 மணியளவில் முகாமை அடைந்த பின்னர் தனியாகப் பிரிந்து சென்று வழி தவறியதாக கூறப்படுகிறது. அவர் கடைசியாக தொடர்பு கொண்டபோது “நான் பாதை தவறிவிட்டேன்” என தெரிவித்திருந்தாலும், பின்னர் அலைபேசி இணைப்பு இல்லாமை மற்றும் சார்ஜ் முடிவடைந்ததால் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
வெறும் 500 மில்லி தண்ணீர் பாட்டிலுடன் மட்டுமே இருந்த அவர், முதல் நாள் மாலை வரை நடந்து சென்றதும், அடர்ந்த காடு காரணமாக ஒரு ஓடை அருகே தங்கியதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மூன்று நாட்கள், யாரையாவது சந்திப்பேன் என்ற நம்பிக்கையில் இடம் மாறிக்கொண்டே இருந்ததாகவும், இடையே பெய்த கனமழையையும், யானைகள் நடமாடும் அபாயகரமான சூழலையும் அஞ்சாமல் சமாளித்ததாகவும் அவர் கூறினார். இந்தச் சம்பவம் மனித மனதின் தன்னம்பிக்கை மற்றும் உயிர் பிழைப்புத் திறனை வெளிப்படுத்துவதாக அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அவரைக் கண்டுபிடிப்பதற்காக சித்தராமையா அவர்களின் உத்தரவின் பேரில் வனத்துறை, நக்சல் தடுப்புப் படையினர், உள்ளூர் பழங்குடியினர் உள்ளிட்ட ஒன்பது குழுக்கள் இணைந்து இரவு பகலாக தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும், வெப்ப உணர்வு ட்ரோன் கேமராக்கள், மேம்பட்ட கண்காணிப்பு கருவிகள் மற்றும் பயிற்சி பெற்ற நாய்கள் ஆகியவையும் தேடுதலில் ஈடுபடுத்தப்பட்டன.
“பொதுவாக யாரும் செல்லாத வனப்பகுதியின் ஒரு ஒதுக்குப்புறத்தில் உள்ளூர்வாசிகள் குழு அவளை கண்டுபிடித்தது மிக முக்கிய திருப்பமாக அமைந்தது” என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். மாநில வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே, சரண்யாவை “தைரியமும் சாகச மனப்பான்மையும் கொண்டவர்” என்று பாராட்டியதோடு, அலைபேசி இணைப்பு இல்லாததால் அவரது இருப்பிடத்தை கண்டறிவது மிகுந்த சவாலாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
தற்போது உடல்நல பரிசோதனைக்குப் பிறகு அவர் முழுமையாக நலமாக இருப்பதாகவும், விரைவில் அவரை பாதுகாப்பாக அவரது சொந்த மாநிலமான கேரளாவுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மலையேற்ற பயணங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் உணர்த்தியிருக்கிறது.





